
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ மற்றும் 4 உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நவ.2-ம் தேதி முதல் நடக்கவுள்ளது. 2026-ம் ஆண்டு்க்கான போட்டித் தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.‌ இதற்கான பாடத்திட்டங்களின்படி தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்த அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம் திட்டமிட்டுள்ளது.
திறமைமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மேலும் மாதிரித் தேர்வுகளுடன் கூடிய கலந்துரையாடல் பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து கட்டணமில்லாமல் இந்த பயிற்சி வகுப்புகளை கடந்த 14 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இங்கு பயிற்சி பெற்ற 1300-க்கும் மேற்பட்டோர் மத்திய, மாநில அரசு பணிகளில் இணைந்துள்ளனர்.

