இந்நிலையில், ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திர மகா தேசிகனின் குருவான சுவாமி தேசிகனின் அவதாரத் திருநாளையொட்டி, திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் உற்சவம் அக்.2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, அக்.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, தினசரி காலையில் பல்லக்கு சேவையும், மாலையில் கேடயம், சிம்ம வாகனம், சூரியபிரபை, சந்திர பிரபை, ஹம்ச வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனத்தில் வீதி உலா நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு திருத்தேரில் சுவாமி தேசிகன் எழுந்தருளினார். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இருந்து தேர் புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க 4 மாட வீதிகளில் தேர் வலம் வந்தது. அப்போது பக்தர்கள் சுவாமி தேசிகனை தரிசனம் செய்து வழிபட்டனர்.

