இங்கு 1633-ம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670-ம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்பட்டும், 20 நபர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து தமிழகத்தின் பெருமைமிகு வரலாற்றை வெளிகொண்டு வரும் வகையிலான ஆராய்ச்சியை ஓராண்டுக்கு மாதம் ரூ. 50,000 உதவித்தொகையுடன் மேற்கொள்வதற்கு முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

