நிகழாண்டு வைகுந்த ஏகாதசி பெருவிழா டிச.19-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இதையொட்டி, முகூர்த்தக்கால் நடும் வைபவம் கோயல் ஆயிரங்கால் மண்டபம் அருகில் ஐயப்பசி தசமி திதி அவிட்டம் நட்சத்திரம் தனுர் லக்னத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, கோயில் பட்டர்கள் வேதங்கள் ஓத, மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வரங்கள் ஒலிக்க கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்துக்கு அருகில் நின்றபடி மரியாதை செலுத்தின.
பந்தல் காலில் புனிதநீர் ஊற்றி, சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பந்தல்காலை கோயில் பணியாளர்கள் நட்டனர். தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல்கால்கள் நடப்பட்டு திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

