மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு குழுக்களைக் கலாம் உருவாக்கினார். நிறுவனப் பங்குதாரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தார். ஐந்து ஏவுகணைத் தொகுதியின் மிகப் பெரிய ஏவுகணையான ‘அக்னி’யை 1989இல் வெற்றிகரமாக ஏவிய பிறகு ‘இந்தியாவின் ஏவுகணை மனிதர்’ எனக் கொண்டாடப்பட்டார். ‘அக்னி’யின் வெற்றி, இந்தியப் பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை அரசுக்கும் மக்களுக்கும் அளித்தது.
திட்ட இயக்குநர்கள் பலரால் ஏவுகணைத் திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்துக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும்படி அப்துல் கலாம் வலியுறுத்தினார். எந்தத் திட்டமாக இருந்தாலும், அதில் பல்வேறு துறைகளும் பயன்பெறும் வகையில் பலவகையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அது.

