‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தினை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார்.
சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தினை பார்த்துவிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் பாராட்டியிருக்கிறார். இது தொடர்பாக “ரிஷப் ஷெட்டி மீண்டும் உருவாக்கிய மாயாஜாலமான ‘காந்தாரா’வை பார்த்தேன். மங்களூரு மக்களின் நம்பிக்கையையும், அழகையும் முழு மனதுடன் பிரதிபலிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தை ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது.
’காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்திருக்கிறது. முதலில் குறைந்த அளவிலான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து ரூ.400 கோடியைத் தொட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தான் ‘காந்தாரா’ படத்துக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.