மும்பை: குளோபல் பின்டெக் விழா மும்பையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: உலகளாவிய நிதி தொழில்நுட்ப தலைநகராக இந்தியா சிறந்து விளங்குகிறது. நிதி தொழில்நுட்பத்தில் புதுமை, அளவு மற்றும் உள்ளடக்கத்தில் புதிய அளவுகோல்களை இந்தியா நிர்ணயித்துள்ளது.
தொழில்நுட்பம் என்பது பொது நலனுக்கானதாக இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் அதனை மற்ற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். குளோபல் பின்டெக் விழாவில் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகர ஐஎப்எஸ்சி-ல் வெளிநாட்டு நாணய தீர்வு முறையை நிதியமைச்சர் தொடங்கி வைத்தார்.
இது, நிகழ்நேர அடிப்படையில் தடையற்ற பரிவர்த்தனைகளை எளிதாக்கும். பணப்புழக்க மேலாண்மையை மேம்படுத்தும். அத்துடன் இணக்கத்தை உறுதி செய்யும். தற்போது வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகளுக்கு வழக்கமாக 36 முதல் 48 மணி நேரம் வரை தாமதமாகிறது. இந்த நிலையில், இப்புதிய முறை வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைக்கு உடனடி தீர்வுகளை வழங்கும்.