பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா வரும் 22-ம் தேதி நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலத்தில் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 27-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடக்கவேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். பிற்பகல் 3 மணிக்கு சின்னக்குமாரசுவாமி அசுரர்களை வதம்புரியும் பொருட்டு, மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சந்நிதி அடைக்கப்படும்.
தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற உள்ளது.
வரும் 28-ம் தேதி மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனாசமேத முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.