சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில், செப்.6-ம் தேதி ரூ.80,040 ஆக இருந்த ஒரு பவுன் ஆபரணத் தங்கம் செப்.23-ம் தேதி ரூ.85,120 ஆக உயர்ந்தது. எச்1பி விசா கட்டணத்தை அமெரிக்க அரசு உயர்த்தியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன்பிறகு, ஓரிரு நாட்கள் இறக்கமாகவும், பெரும்பாலான நாட்கள் ஏற்றமாகவும் இருந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பவுன் தங்கம் ரூ.89 ஆயிரத்தை தொட்டது.
இதன் தொடர்ச்சியாக, ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றும் பவுனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.89,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.11,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் ரூ.97,744 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.167 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.67 லட்சமாகவும் இருந்தது.
செப்.28-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.85,120 ஆக இருந்தது. இது, அக்.7-ம் தேதி ரூ.89,600 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலமாக, 9 நாட்களில் பவுனுக்கு ரூ.4,480 உயர்ந்துள்ளது. தங்கம் விலை ஓரிரு நாளில் ரூ.90 ஆயிரத்தை தொடும் என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.