சென்னை: “கரூர் துயர சம்பவம் சோகம் தான், அதனை பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது. இனி இதுபோன்ற துயரச் சம்பவம் நிகழாமல் தடுப்பது நமது கடமை.” என்று கமல்ஹாசன் எம்.பி. கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். அதேபோல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடல்நலன் குறித்து அவரது மகன் துரையிடம் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது: கரூர் சம்பவம் குறித்து தினமும் பேச வேண்டாம் என்பது எனது கருத்து. மேலும், கரூர் விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் அதில் கருத்து கூற விரும்பவில்லை.
கரூர் உயிரிழப்பு சோகம் தான், அதனை பேசிக்கொண்டே இருப்பதால் சோகம் அகலாது. இனி இதுபோன்ற துயரச் சம்பவம் நடைபெறாமல் தடுப்பதே நமது கடமை. நான் கூறிய கருத்துகளில் இருந்தும் அரசியல் செய்யலாம். ஆனால், ஒருவர் கூறும் கருத்துகளில் இருந்து அரசியல் செய்யாமல் இருப்பது நமது கடமை” என்று கமல்ஹாசன் கூறினார்.