சென்னை: “கரூர் சம்பவம் தொடர்பாக யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் இங்கு வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.” என நடிகை அம்பிகா கருத்து தெரிவித்துள்ளார்.
கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடிகை அம்பிகா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த 2 வயது குழந்தை துருவ் விஷ்ணு இல்லத்தில் உறவினர்களை சந்தித்து நடிகை அம்பிகா ஆறுதல் தெரிவித்தார்.
அதேபோல், கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்த மனைவி, இரு மகள்களை இழந்த ஆனந்த் ஜோதியையும் சந்தித்தும் நடிகை அம்பிகா ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் 41 பேர் இறந்துள்ளனர். அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இன்று கரூர் வந்துள்ளேன். யாரையும், எந்தக் கட்சியையும் குறை சொல்வதற்காக நான் வரவில்லை. சம்பவம் நடந்ததற்கு யார் மீது தவறு என்பதை சொல்வதற்கும் நான் வரவில்லை. இனிமேல் இப்படி ஒரு சம்பவம் நடக்கக் கூடாது.
அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகளை தூக்கிக்கொண்டு செல்லக்கூடாது என்று அரசும், கட்சிகளும் அறிவுரை கூறுகின்றனர். ஆனால், அதையும் மீறி குழந்தைகளை தூக்கிக் கொண்டு செல்கின்றனர். அதற்காக அவர்களை அடித்து தடுத்து நிறுத்த முடியுமா?. இனிமேல் இப்படி நடக்கக் கூடாது. நான் கரூர் வந்துள்ளது குறித்து என் மீது எந்தச் சாயமும் பூச வேண்டாம். நான் எந்தக் கட்சியைச் சார்ந்தும் பேச வரவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.