சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே.சுதீஷின் தாயார் அம்சவேணி உடல்நலக்குறைவால் காலமானார். வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அம்சவேணி, அண்மைக்காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “தேமுதிக பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக.,வின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.