ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 6 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் (எஸ்எம்எஸ்) அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்நோயாளிகளாக ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மருத்துவமனையின் பிறபகுதிகளுக்கும் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள், அவர்களது குடும்பத்தினர் உடனடியாக அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். சுமார் 4 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீவிபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்கள் எரிந்து நாசமாயின. தீ விபத்து குறித்து போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அமைச்சர்கள் ஜோகராம் படேல், ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு முதல்வர் பஜன்லால் சர்மா ஆறுதல் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.