நாகப்பட்டினம்/காரைக்கால்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேரை தாக்கி படகுகளில் இருந்த வலை உள்ளிட்ட பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28), விமல்(26), சுகுமார்(31), திருமுருகன் (31), முருகன்(38), அருண்(27) ஆகிய 6 பேர் ஃபைபர் படகில் நேற்று முன்தினம் இரவு கோடியக்கரை கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர் 8 பேர், மீனவர்களின் படகில் ஏறி இரும்புக் கம்பி, கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்த வெள்ளி செயின், இன்ஜின், செல்போன், ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.
இதேபோல, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நம்பியார் நகரைச் சேர்ந்த சசிகுமார் (30), உதயசங்கர்(28), சிவசங்கர்(25), கிருபா(29), கமலேஷ்(19) ஆகிய 5 பேரையும் நேற்று முன்தினம் இரவு தாக்கி, இன்ஜின், ஜிபிஎஸ், செல்போன், 500 கிலோ வலை ஆகியவற்றைப் பறித்து சென்றனர்.
2 படகுகளிலும் மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதில், காயமடைந்த 10 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலத்த காயமடைந்த சிவசங்கர், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, நாகை கடலோர காவல் குழும போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து நாகை நம்பியார் நகர் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அச்சமின்றி மீன்பிடி தொழில் செய்ய மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திரா மீனவர்கள் தாக்குதல் காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில், ஆந்திர மாநிலப் பகுதி கடல் பரப்பில் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோர், காரைக்கால் மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்த வாக்கி டாக்கி, வலைகள், மீன்கள், செல்போன்களை பறித்து சென்றுள்ளனர். இதில் காயமடைந்த காரைக்கால் மீனவர்கள் நேற்று கரை திரும்பி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.