சென்னை: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் பிஎஃப்ஐ கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 60 முதல் 65 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் அசாமை சேர்ந்த அங்குஷிதா போரோ 3-2 என்ற கணக்கில் ராஜஸ்தானை சேர்ந்த பர்தவி கிரேவாலை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
65 முதல் 70 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் சர்வீசஸ் அணியை சேர்ந்த அருந்ததி சவுத்ரி 5-0 என்ற கணக்கில் ஆந்திராவை சேர்ந்த ஸ்நேகாவை தோற்கடித்து பட்டம் வென்றார். 57 முதல் 60 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற பர்வீன் ஹூடா (சாய்) 3-2 என்ற கணக்கில் ஹரியானாவை சேர்ந்த பிரியாவை தோற்கடித்தார்.
45 முதல் 48 கிலோ எடை பிரிவில் உத்தரகாண்டின் நிவேதிதா கார்கி 3-2 என்ற கணக்கில் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற மஞ்சு ராணியை (ரயில்வேஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். 48 முதல் 51 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் ரயில்வேஸ் அணியை சேர்ந்த பாவ்னா சர்மா 5-0 என்ற கணக்கில் சவிதாவை (ரயில்வேஸ்) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
51 முதல் 54 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவின் குஷி யாதவ் 3-2 என்ற கணக்கில் திவ்யா பவாரையும் (ஏஐபி), 54 முதல் 57 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் இமாச்சல்பிரதேசத்தை சேர்ந்த வினாக்சி 5-0 என்ற கணக்கில் முஷ்கானையும் (ஏஐபி) வீழ்த்தி பட்டம் வென்றனர்.
70 முதல் 75 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் மோனிகா (சாய்) 4-1 என்ற கணக்கில் ஹரியானாவின் நிஷுவையும், 75 முதல் 80 கிலோ எடை பிரிவு இறுதிப் போட்டியில் பபிதா பிஷ்த் 3-2 என்ற கணக்கில் பஞ்சாபின் கோமலையும், 80+ கிலோ எடை பிரிவில் ரிகிதா 5-0 என்ற கணக்கில் ஷிவானியையும் (ஏஐபி) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஹஷ்முதின் அசத்தல்: ஆடவருக்கான போட்டியில் 47 முதல் 50 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் விஷ்வநாத் (சர்வீசஸ்) 5-0 என்ற கணக்கில் கோபி மிஸ்ராவை (சர்வீசஸ்) தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதேவேளையில் 50 முதல் 55 கிலோ எடை பிரிவு அரை இறுதி போட்டியில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற அமித் பங்கால்(சர்வீசஸ்) 1-4 என்ற கணக்கில் ஆஷிஷிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 55 முதல் 60 கிலோ எடை பிரிவு அரை இறுதியில் சர்வீசஸ் அணியின் முகமது ஹஷ்முதின் 5-0 என்ற கணக்கில் ரயில்வேஸின் மிதேஷ் தேஷ்வாலை தோற்கடித்து இறுதிப் போட்டியில் கால்பதித்தார்.