கோவை: ஆளுநரை திமுக அரசு எதிரியாக சித்தரித்து வருகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பாஜக முகாம் அலுவலகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திமுக அரசின் ஊழலுக்கு தடையாக இருப்பதால் அவரை தமிழக அரசு எதிரியாக சித்தரித்து வருகிறது.
திமுகவுக்கு எதிராக செயல்படும் ஊடக நிறுவனங்களை அரசு கேபிளில் இருந்து முடக்குவது, சமூக வலைதளங்களில் திமுகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை கைது செய்வது போன்றவை கருத்து சுதந்திரத்தை முடக்கிய எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. கரூர் துயர சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளிவரும் முன் அது குறித்து அரசியல் ரீதியாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை” என்று எல்.முருகன் கூறினார்.