சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.6) இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11,125 ஆகவும், ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.89,000 ஆகவும் விற்பனையாகிறது. இது புதிய வரலாற்று உச்சம் என்பது கவனிக்கத்தக்கது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை அமைகிறது.
கடந்த 1-ம் தேதி தங்கம் விலை ஒரு பவுன் ரூ.87,600 என்ற உச்சத்தை எட்டியது. இந்நிலையில், இன்று காலையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,060-க்கு விற்பனை ஆனது. அதுபோல பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.88,480-க்கு விற்பனை ஆகிறது. இன்று காலையில் வெள்ளி விலையும் கிராம் ஒன்றுக்கு ரூ.1 என உயர்ந்து, ஒரு கிராம் ரூ.166-க்கு விற்பனை ஆனது. கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,000 அதிகரித்து, ரூ.1,66,000-க்கு விற்பனை ஆகிறது.
இந்த சூழலில் இன்று இரண்டாவது முறையாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.11,125க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.89,000க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.167க்கு விற்பனையாகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக வீழ்ச்சி கண்டதே இந்த விலை உயர்வுக்குக் காரணம்.