சென்னை: காஞ்சி காமகோடி பீடத்தின் 70-வது சங்கராச்சாரியாரான ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சென்று கற்பகாம்பாளுக்கு வைரம் பதித்த தங்க மூக்குத்தியை அணிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.
பின்னர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை வழங்குகையில், ஆதிசங்கரரின் திரிபுர சுந்தரி மானச பூஜை ஸ்தோத்திரம் மற்றும் லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றின் குறிப்புடன், தேவிகளுக்கு அலங்காரம் செய்யும் ஆதிசங்கரர் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் திருவானைகோவிலில் அகிலாண்டேஸ்வரிக்கு தாண்டக பிரதிஷ்டை (காது அலங்காரம்) ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளால் வழங்கப்பட்டது. இப்போது மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது. 1966 பிப்ரவரி 19-ம் தேதியன்று இதே விஸ்வாவசு ஆண்டில் காஞ்சி காமகோடி பீடத்தின் மகாஸ்வாமிகள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு விஜயம் செய்தபோது, தருமபுரம் ஆதீனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சைவ ஆன்மிக சேவை நிகழ்வான தெய்வீக பேரவையை 68-வது சங்க ராச்சாரியார் தொடங்கி வைத்தார்.
அந்த நிகழ்வையும் இப்போது அவர் நினைவுகூர்ந்தார். முன்னதாக ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை இணை ஆணையர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி.கே.கவேனிதா மற்றும் கோயில் அறங்காவலர்கள் பாரம்பரிய மரியாதையுடன் வரவேற்றனர்.