1980-90-களின் நடிகர்கள் வருடந்தோறும் ஒன்றுகூடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா இல்லத்தில் இந்த ஒன்று கூடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர்.
‘ஒன்றாகப் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்கள் மீண்டும் கூடுவது போல 1980-கள் மற்றும் 90-களில் இந்திய திரையுலகை கலக்கிய நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்தித்து நட்பை வலுவாக்கி, நினைவுகளை உயிர்ப்பித்து வருகின்றனர். கனமழை காரணமாக கடந்த ஆண்டு இந்த நிகழ்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 80-ஸ் ஸ்டார்ஸ் ரீயூனியன் நடந்தேறியது.
ஆர்ப்பாட்ட கொண்டாட்டமாக இல்லாமல் அன்பின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு நடைபெற்றது. சென்னையில் ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா தம்பதியரின் இல்லத்தில் அக்டோபர் 4 மாலை நடைபெற்ற இந்நிகழ்வை லிஸ்ஸி லட்சுமி, பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு மற்றும் சுஹாசினி மணிரத்னம் ஒருங்கிணைத்தனர்.
இந்த இனிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி திரைத்துறைகளை சேர்ந்த 31 நடிகர்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர். அன்பு, நட்பு, மற்றும் ஒற்றுமை நிறைந்த இந்த சங்கமத்தில் கலந்துகொண்டவர்கள் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.
மாலையில் தொடங்கிய ரீயூனியன் காலை வரை நடைபெற்றது. பின்னர் அனைவரும் அடுத்த வருடம் ஒன்று கூடுவோம் எனும் உறுதியோடு விடைபெற்றனர்’ என்றது ஏற்பாட்டாளர்கள் குழு.
இது குறித்து சுஹாசினி மணிரத்னம் மற்றும் லிஸ்ஸி லட்சுமி மேலும் கூறுகையில், “இந்த நிகழ்வை ஒருங்கிணைத்ததில் பெரும் மகிழ்ச்சி. எங்களுக்கிடையேயான நட்பு, அன்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த சங்கமம் அமைந்தது” என்றனர்.
இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, வெங்கடேஷ், ஜாக்கி ஷெராஃப், சரத்குமார், ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீப்ரியா, நதியா, ராதா, சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், ஜெயசுதா, சுமலதா, ரஹ்மான், குஷ்பு, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், லிஸ்ஸி, சுரேஷ், ஷோபனா, மேனகா, ரேவதி, பிரபு, ஜெயராஜ், அஸ்வதி ஜெயராம், சரிதா, பானு சந்தர், மீனா, லதா, ஸ்வப்னா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.