பாட்னா: விரைவில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் புதிய சீர்திருந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது குறித்து பார்ப்போம்.
பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் நவம்பரில் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தலுக்கான தேதியை அறிவிக்க உள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். புதிய சீர்திருத்தங்களை பிஹார் தேர்தலில் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம். அதில் சில தேர்தலின் போதும், சில வாக்கு எண்ணிக்கையின் போதும் நடைமுறைக்கு வரும்.
வாக்காளர்கள் பதிவு செய்த 15 நாட்களுக்குள் வாக்காளருக்கு கிடைப்பதை உறுதி செய்யும் எஸ்ஓபி நடைமுறை, வாக்குச் சாவடியில் மொபைல்போன்களை டெபாசிட் செய்யும் வசதி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,200-க்கும் குறைவான வாக்காளர்கள் மட்டுமே இருப்பார்கள். இதன் மூலம் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை தவிர்க்கப்படும். நாட்டிலேயே இது முதல்முறை. வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை கூட்டியது இதற்கு காரணமாக அமைந்துள்ளது.
முக்கியமாக மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் வண்ண புகைப்படம் மற்றும் வரிசை எண்ணின் எழுத்துரு பெரியதாக இருக்கும். இந்த அம்சத்தை பெறுகின்ற முதல் மாநிலம் பிஹார் தான். வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களுக்கு அடையாள அட்டை, அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் ‘வெப் காஸ்ட்டிங்’ கவரேஜ் இருக்கும். இதன் மூலம் வாக்குப்பதிவு 100 சதவீதம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கையின் போது படிவம் 17சி மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் வித்தியாசம் இருந்தால் அவை அனைத்தும் மீண்டும் முழுமையாக எண்ணப்பட வேண்டும். இது ஏற்கெனவே உள்ள நடைமுறை தான். இந்தியா முழுவதும் இந்த புதிய சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்தார்.