சென்னை: பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க விதிகளை வகுக்க அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில், “தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டங்களை நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பிக்கிறோம். பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
ஏதேனும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லாத பட்சத்தில், அதற்கான இடத்தை சம்பந்தப்பட்ட தேர்வு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வாறு அவை தேர்வு செய்து தரும் இடம் பாதுகாப்பானதாகவும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வசதி கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில் அங்கு கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம்’’ என்று கூறியுள்ளது. இதை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வும் உறுதி செய்திருக்கிறது.
மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் இந்த இடைக்கால ஆணையைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது; பொதுக்கூட்டங்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுக்கிறது. பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று காவல்துறை தட்டிக் கழிக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறும் போது அவற்றுக்கு வருபவர்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் உறுதி செய்ய வேண்டும்; பங்கேற்கும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவை ஏற்பட்டால் அழைப்பதற்கு தயாராக அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றக் கிளையின் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல லட்சம் மக்கள் பங்கேற்ற ஏராளமான மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இத்தகைய நிபந்தனைகளை தாமாக கடைபிடித்து நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்க வில்லை.
அதேநேரத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்களால் முறையாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படாத, காவல்துறையால் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துயர நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாசிசம் தலைதூக்க வழிவகுத்துவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), 19(1)(பி) ஆகிய பிரிவுகளின்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை, அமைதியாக ஓரிடத்தில் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றை பறிக்கும் செயலாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துக் கூறுவதும், நாட்டு நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், நடைபயணங்கள், துண்டுபிரசுரங்களை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் தான் இவற்றை செய்ய முடியும்.
மக்கள் கூடும் இடங்களில் தான் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ஆனால், உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தீர்ப்பைத் தொடர்ந்து தனியார் இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி காவல்துறையும், மாவட்ட நிர்வாகங்களும் கட்டாயப்படுத்துகின்றனர். இதை ஏற்க முடியாது.
அரசியல் கட்சிகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்களை தங்களை நோக்கி வரும்படி கட்டாயப் படுத்தக் கூடாது. ஆளில்லாத இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாத்தியமற்றது. தனியார் இடங்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி காவல்துறையினர் கூறுவது கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இதற்கு நீதிமன்றங்கள் துணைபோகக் கூடாது.
ஏற்கனவே, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் நோக்கம் மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வது தான். மக்கள் பணியாற்றும் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொதுஇடங்களில் தான் அமைக்க முடியும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அப்படித் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் இடத்தை வாங்கி அதில் தான் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்றால், மக்கள் நல நோக்கம் கொண்ட எந்தக் கட்சியும் கொடிக்கம்பங்களை அமைக்கமுடியாது. ஊழல் செய்து சொத்து சேர்த்தக் கட்சிகள் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதையெல்லாம் உணர்ந்து தான் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை நெடுஞ்சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற உயர் நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது அரசியல் கட்சிகளை முடக்கி வைக்கும் செயலாகும்.
அரசியக் கட்சிகளின் நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதற்காக விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகள் அவற்றின் ஜனநாயகக் கடமையை செய்யாமல் முடங்கிக் கிடக்க முடியாது. எந்த ஒரு சூழலையும் சமாளிக்க இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய சூழலை சமாளிக்கவும் இடைக்கால ஏற்பாடு தேவை.
எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும். அதற்காக அரசின் சார்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.