புதுடெல்லி: மணிக்கு 7,400 கிமீ வேகத்தில் சீறிப் பாயும் த்வனி ஏவுகணை டிசம்பரில் சோதனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏவுகணை தொழில்நுட்பத்தில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகியவை முன்னோடிகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் அதிவேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைக்கு உலகம் முழுவதும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
தற்போது பிரம்மோஸைவிட அதிவேகமாக சீறிப் பாயும் த்வனி என்ற ஏவுகணையை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து உள்ளது. இந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை மணிக்கு 7,400 கி.மீ. வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டதாகும். இதுகுறித்து டிஆர்டிஓ வட்டாரங்கள் கூறியதாவது:
ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியைவிட 5 முதல் 6 மடங்கு வேகத்தில் சீறிப் பாயும். இந்த வகை ஏவுகணை முதலில் வானத்தை நோக்கி சுமார் 100 கி.மீ. தொலைவை தாண்டி செல்லும். அதாவது வளிமண்டலத்தை தாண்டி சென்றுவிடும். பின்னர் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி சீறிப் பாய்ந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும். ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை ரேடாரில் கண்டறிவது கடினம்.
தற்போது ரஷ்யா, அமெரிக்கா, சீனாவிடம் மட்டுமே ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணைய இருக்கிறது. இந்த ஏவுகணை 9 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் அகலம் கொண்டதாகும். சுமார் 6,000 கி.மீ. முதல் 10,000 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் அவான்கார்டு, அமெரிக்காவின் டார்க் ஈகிள், சீனாவின் டிஎப்-இசட்எப் ஆகிய ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகளுக்கு இணையாக த்வனி ஏவுகணை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
இதன்மூலம் எதிரிகளின் அணு ஆயுத அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்கொள்ள முடியும். மேலும் எதிரிகளின் போர்க்கப்பல் உட்பட எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் த்வனி ஏவுகணை சோதனை செய்யப்படும். வரும் 2029-ல் இந்திய ராணுவத்தில் ஏவுகணை சேர்க்கப்படும்.
அமெரிக்காவின் தாட் வான் பாதுகாப்பு கவசம், இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு கவசத்தால்கூட த்வனி ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது. இவ்வாறு டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.த்வனி ஏவுகணையின் மாதிரி.