கொச்சி: கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பீட்டர். இவர் கடந்த 1989-ம் ஆண்டில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் விடில்லா கிளையில் ரூ.39,000-ஐ நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளார். இவர் கடந்த 2022-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதனால் பீட்டரின் மகன் ஜார்ஜ் என்பவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி ஆவணம், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பித்து தனது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி பணத்தை கேட்டுள்ளார்.
வங்கி இணைப்பு காரணமாக ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூரின் பழைய ஆவணங்கள் தங்களிடம் இல்லை என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூறி பணத்தை தர மறுத்தது. இதுகுறித்த புகாரை எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் விசாரித்து அளித்த தீர்ப்பில், ‘‘நிரந்தர வைப்பு நிதி ரசீது வெறும் ஆவணம் மட்டும் அல்ல. இது குடும்பத்தினரின் சேமிப்பு மற்றும் நம்பிக்கை. மனு தாரருக்கு அவரது தந்தையின் நிரந்தர வைப்பு நிதி பணம் ரூ.39,000-ஐ வட்டியுடன் 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.
மேலும், அவருக்கு ஏற்பட்ட மனவேதனைக்கு இழப்பீடாக ரூ.50,000 வழங்க வேண்டும். வழக்கு செலவுக்கு ரூ.5000 வழங்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.