திருமலை: புரட்டாசி மாதம் முழுவதும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஏற்கெனவே பிரம்மோற்சவ விழாவில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். பிரம்மோற்சவத்தின் 9 நாட்களில் பக்தர்கள் சுமார் ரூ.25 கோடியை உண்டியலில் காணிக்கை செலுத்தினர்.
பிரம்மோற்சவ விழா முடிந்த நிலையில், நேற்று 3-வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, வெள்ளிக்கிழமை முதலே திருமலையில் பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
ஆனால், வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் திருமலையில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. விடிய, விடிய மழை பெய்ததால், பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
3-ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் சுவாமியை 73,581 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதில் 28,976 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.2.60 கோடி உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தினர்.
தர்ம தரிசனத்தில் சுவாமியை தரிசிக்க 15 முதல் 18 மணி நேரம் ஆனது. இதற்காக கோயிலுக்கு வெளியே சுமார் 3 கி.மீ. தூரம் வரை வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடு முறை என்பதால் பக்தர்களின் கூட்டம் இன்றும் குறையாது என்றே கூறப்படுகிறது.