புதுடெல்லி: கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்குவது தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி
வைத்த ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
சட்டப்பேரவையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ உருவாக்குவதற்கான மசோதா தாக்கல் செய்து, நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகள், துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், குடியரசுத் தலைவருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ‘கலைஞர் பல்கலைக்கழகம்’ தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மிஷா ரோஹ்தகி ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.