தூத்துக்குடி: ‘கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம்’ என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடைபெற உள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வதற்காக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை திருச்செந்தூர் அமலி நகர் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மீனவர்களது படகில் சீமான் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து சிமான் செய்தியாளர்களிடம் கூறியது: “கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் எப்படி பாதுகாத்திடுவது என்பது குறித்து தூத்துக்குடியில் வரும் நவ.15-ம் தேதி கடல் அம்மா மாநாடு நடத்துகிறோம். ஏற்கெனவே மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு நடந்தது. கரூர் சம்பவத்தால் அந்த செய்தி மக்களிடம் போய் சேரவில்லை. எனவே கடல் அம்மா மாநாட்டுக்கான ஆலோசனை பயணம் தான் இது. அமலிநகரில் படகில் சென்று கடலில் பார்வையிட்டோம்.
அணு உலை, ஸ்டெர்லைட் போன்ற ஆலைக்கழிவு, சாயக்கழிவுகள் என எல்லா கழிவுகளும் கடலில் தான் கலக்கிறது. அணு உலையை குளிர்விக்க பயன்படுத்தும் கடல் நீரே கடல் வாழ் உயிரினங்களை நச்சாக்குகிறது. அணு உலைக்கெதிராக போராடியும், மூட முடியவில்லை. ஆனாலும் அந்த பேராபத்தை உணர்த்துகிறோம். அமலிநகர் கடலில் அரிப்புக்கு காரணம் அனல்மின் நிலைய துறைமுகம் தான் என சகோதரர்கள் கூறுகின்றனர்.
தவெக தலைவர் விஜய்க்கு இசட் பிரிவு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுவதாக கேட்பதால் கொடுக்கின்றனர். கருர் நிகழ்வில் அவருக்கு பாதுகாப்பு இருந்தது. மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை. நாங்கள் பாதுகாப்பு கேட்டாலும் கொடுப்பதில்லை. கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் அறிவுறுத்தியது தொடர்பாக சட்ட முடிவுகள் குறித்து கருத்து கூற முடியாது. இந்த நிகழ்வுகளை தவிர்க்க அரசியல் கட்சிகள் ஒரு இடத்தை வாங்கி அங்கு வைத்து கூட்டம் நடத்திக் கொள்ளலாம். தெருக்களில் போவது நெரிசலை தான் ஏற்படுத்தும். மேலை நாடுகளைப் போல ஒவ்வொரு தலைவருக்கும் ஓரே இடத்தில் நேரம் ஒதுக்கி பரப்புரையை கொண்டு வரலாம்.
விஜய்யை காப்பாற்றுவது என பாஜக நிலைப்பாடு எடுத்துள்ளது. விஜய் கரூர் பரப்புரைக்கு வந்ததால் தான் அந்த கூட்டம். அதனால் அவர் தான் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு அரசு, காவல்துறை மீது பழிபோட்டு விட்டு, எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுவதால் தான் சிக்கல் ஏற்படுகிறது. இருவரும் தான் பொறுப்பு. ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி பழி சுமத்துவது உயரிழப்பு சம்பவத்தை விட கொடுமையாக உள்ளது.
பாஜக விஜயை கூட்டணிக்குள் கொண்டு வரப்பார்க்கிறது. அதிமுகவும் அதே கூட்டணியில் உள்ளதால் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறது. இந்தி மும்மொழிக் கொள்கை. திராவிடம் இரு மொழிக்கொள்கை. தமிழ் தேசியத்துக்கு தமிழ் மொழிக்கொள்கை மட்டுமே.
நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும். கோட்பாட்டை கொண்டு அடகு வைக்க மாட்டோம். பிரதமர் பதவியை அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் சுழற்சி முறையில் வழங்க வேண்டும். குஜராத்தை சேர்ந்தவரே 3 முறை பிரதமராக உள்ளார். முதல்வர் பதவி அதிகாரமற்ற பதவி என்றால் எதற்கு ரூ.5 ஆயிரம் கோடி, ரூ. 6 ஆயிரம் கோடி தேர்தலில் செலவு செய்து பதவிக்கு வரவேண்டும்” என்று சீமான் கூறினார்.