சென்னை: “தவெக தலைவர் விஜய்யை கூட்டணிக்குள் இழுக்க பாஜக முயற்சி செய்கிறது” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தம்பி விஜய் கரூருக்கு வருவதால் தான் இந்த கூட்டம் வருகிறது. இந்த கூட்டத்துக்கு அவரின் வரவு தான் முக்கியக் காரணம். கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று, நான் வருந்துகிறேன் என விஜய் கூறியிருந்தால் அது முற்று பெற்றிருக்கும். கரூர் சம்பவத்துக்கு அரசு தான் பழியை ஏற்க வேண்டும், காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என சொல்வதில் தான் சிக்கல் உண்டாகிறது.
இச்சம்பவத்தில் அரசு, விஜய் ஆகிய இரு தரப்புக்கும் பொறுப்பு இருக்கிறது. மாற்றி மாற்றி இவர்கள் பழி போடுவதை பார்க்கும் போது, உயிரிழப்புகளை விட கொடுமையானதாக இருக்கிறது. கரூர் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு காவல்துறைக்கு நன்றி சொல்லித்தான் விஜய் தனது பேச்சை தொடங்குகிறார். ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டவுடன் பழி போடுகிறார்.
பாஜக எப்படியாவது விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்று என விஜய் கூறியது கொடுமையானது. இவை இரண்டும் மாறுபட்டவை. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.