அருள்நிதி நடித்து வந்த ‘ராம்போ’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
முத்தையா இயக்கத்தில் அருள்நிதி புதிய படமொன்றில் நடித்து வந்தார். இந்தப் படம் முழுக்க சென்னையிலேயே படமாக்கி முடிக்கப்பட்டது. தற்போது இப்படத்துக்கு ‘ராம்போ’ எனப் பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை அளித்திருக்கிறது.
குறைந்த முதலீட்டில் ஒரே கட்டமாக இப்படம் படமாக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்தினை நேரடியாக ஓடிடி வெளியீடாக முடிவு செய்திருக்கிறார்கள். அக்டோபர் 10-ம் தேதி இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க குத்துச்சண்டையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தான்யா ரவிச்சந்திரன், விடிவி கணேஷ், அபிராமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் அருள்நிதியுடன் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஜிப்ரான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.