உத்தராகண்ட்: உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவராக உள்ள ஆதவ் அர்ஜுனா உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான இன்று காலை அங்கு வந்தார். ஜாலி கிராண்ட் விமான நிலையத்தில அவரிடம் ஏஎன்ஐ செய்தியாளர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுகளை சுட்டிக்காட்டி, “இனி தவெக பிரச்சாரப் பயணம் தொடரும் என நினைக்கிறீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆதவ் அர்ஜுனா, “நாங்கள் பிரச்சினையை நீதி ரீதியாக அணுகுகிறோம். உண்மையும், நீதியும் நிச்சயம் ஒருநாள் வெளிவரும்.” என்று மட்டும் கூறிச் சென்றார்.
சம்பவமும், கோர்ட் கண்டனமும்: கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆதவ் அர்ஜுனா, தனது சமூக வலைதள பக்கத்தில், ‘இலங்கை, நேபாளம் போல புரட்சி வெடிக்கும்’ என கருத்து பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரை சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கும் நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆதவ் அர்ஜூனாவின் எக்ஸ் தள பதிவுகளும் நீதிபதியிடம் காண்பிக்கப்பட்டன. தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காவல்துறை காத்திருக்கிறதா? புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்தும் உத்தரவிட்டார். இந்நிலையில், உண்மையும், நீதியும் நிச்சயம் வெளியே வரும் என்று தவெக தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, கரூர் சம்பவத்துக்குப் பின்னர், தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முக்கிய நிர்வாகிகள் யாருமே நிகழ்விடத்துக்கு இதுவரை வரவில்லை, முறையே துக்கம் கூட தெரிவிக்கவில்லை, ஒரு இரங்கல் கூட்டம் நடத்தவில்லை என்று பொதுமக்கள் தொடங்கி நீதிமன்றம் வரை விமர்சித்துள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா மீண்டும் விமர்சனத்துக்குள்ளாகக் கூடிய கருத்துகளை இப்போது கூறிச் சென்றுள்ளார்.