விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ரகசியமாக நடைபெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறவுள்ளது.
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் நீண்ட வருடங்களாக காதலித்து வருகிறார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் இருவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என முடிவு செய்திருக்கிறார்கள். இந்த தகவல் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகி இருக்கிறது.
‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் முதலில் சேர்ந்து நடித்தார்கள். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இருவருமே முன்னணி நடிகர்களாக வலம் வந்தனர். குறிப்பாக ராஷ்மிகா நடித்த பல படங்கள் வரவேற்பைப் பெற்றதால், இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இருவருமே தங்களுடைய பணிகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தற்போது விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவருமே நீண்ட வருடங்கள் கழித்து புதிய படமொன்றில் இணைந்து நடிக்கவுள்ளார்கள். தில் ராஜு தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. திருமணத்துக்கு பின்பும் ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து நடிப்பார் என தெரிகிறது. ஏனென்றால் பல்வேறு படங்களில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.