மதுரை: ”விஜயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். நான் என்ன தவெகவின் மார்க்கெட்டிங் ஆபிசரா?” என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கோபமாக பேசினார்.
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில், அவரை மதுரை மாநகர், கிழக்கு மாவட்ட பாஜக தலைவர்கள் மாரிசக்கரவர்த்தி, ராஜசிம்மன் மற்றும் முன்னாள் நிர்வாகி ஹரிகரன் மற்றும் பலர் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம் ‘பாஜகவின் ஏ டீம் தான் தவெக’ என சீமான் கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “இதை விஜய்யிடம் கேளுங்கள், அவரை தவிர எல்லோரும் பேசுறாங்க, தவெக கட்சியினரை கேளுங்கள், நான் என்ன தவெகவுக்கு மார்க்கெட்டிங் ஆபீசரா? தைரியம் இருந்தால் என்ன செய்ய வேண்டும். விஜய்யிடம் கேளுங்கள், தவெகவிடம் கேளுங்கள், தவெக செய்தித் தொடர்பாளர்களிடம் கேளுங்கள். சும்மா என்னையே தொந்தரவு செய்கிறீர்கள்.
சென்னையில் கேட்கிறீங்க, மதுரை வந்தாலும் கேட்கிறீங்க. நான் என்ன கருத்து சொல்ல முடியும்? சொல்ல வேண்டிய கருத்துகளை ஏற்கெனவே கூறிவிட்டேன். அதற்கு பிறகும் அவர் சொன்னார், இவர் சொன்னார் கேள்வி எழுப்புகின்றனர். நீங்க யார் கிட்ட கேள்வி கேட்க வேண்டும், சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்” என்று அண்ணாமலை காட்டமாக கூறினார்.