புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து கூடுதலாக 3.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவான காரணங்களைக் கூற வேண்டும் என்று சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா வலியுறுத்தியுள்ளார்.
பிஹார் இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியிட்டது. வரைவு வாக்காளர் பட்டியலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தில் கூடுதலாக 3.66 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ஒட்டுமொத்தமாக 68.5 லட்சம் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில், 21.53 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம், மொத்தத்தில் 47 லட்சம் பெயர்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக, கடந்த ஜூன் 24-ம் தேதி நிலவரப்படி 7.89 கோடியாக இருந்த பிஹார் வாக்காளர்களின் எண்ணிக்கை தற்போது 7.42 கோடியாக குறைந்துள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபங்கர் பட்டச்சார்யா, “தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் தெளிவு இல்லை. இது மிகவும் கவலை அளிக்கிறது. 3.66 லட்சம் வாக்காளர்கள் புதிதாக நீக்கப்பட்டதற்கான காரணங்களை தேர்தல் ஆணையம் குறிப்பிட வேண்டும்.
இறுதி வாக்காளர் பட்டியலில் 4 முக்கிய சிக்கல்கள் உள்ளன. முதலில், வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இடம்பெறாத எத்தனை பேர் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்பதை தேர்தல் ஆணையம் தெரியப்படுத்த வேண்டும். சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன் வாக்காளர் பட்டியலில் 1000 ஆண்களுக்கு 914 பெண்கள் இருந்தனர். அது, இறுதி வாக்காளர் பட்டியலில் 892 ஆக குறைந்துள்ளது. இதேபோல், வரைவு வாக்காளர் பட்டியலைவிட இறுதி வாக்காளர் பட்டியலில் பல தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல்படி மொத்த வாக்காளர்கள் 7.42 கோடி. ஆனால், சிறப்பு தீவிர திருத்தத்துக்கு முன்பு இது 7.89 கோடியாக இருந்தது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க படிவம் 6-ஐ பயன்படுத்தி சேர்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த படிவம் வழக்கமாக முதல்முறை வாக்காளர்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. படிவம் 6ஐ பயன்படுத்தி சேர்க்கப்பட்டவர்களில் எத்தனை பேர் முதல்முறை வாக்காளர்கள் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் என்ற காரணத்தின் கீழ் சுமார் 6,000 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் எப்படி வரையறுத்தது என விளக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.