சென்னை: விஜயதசமி நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்தனர். விஜயதசமி தினத்தில் தொடங்கப்படும் செயல்கள் வெற்றிபெறும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் பள்ளிகளில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை சேர்ப்பது வழக்கம்.
அதன்படி விஜயதசமி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் பெரும்பாலான பள்ளிகள், கோயில்களில் குழந்தைகளின் விரல் பிடித்து கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பள்ளிகளில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் ஆசிரியர் மடியில் குழந்தையை அமர வைத்து ‘அ’ எழுத்து எழுத வைத்தனர்.
இதேபோல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் விறுவிறுப்பாக நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் சேர்த்தனர்.
அந்தவகையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மழலையர் மற்றும் 1-ம் வகுப்பில் நேற்று சுமார் 2 ஆயிரம் குழந்தைகள் வரை புதிதாக சேர்ந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சில கோயில்களில் தங்க மோதிரத்தால் குழந்தைகளின் நாவில் ‘அ’ எழுதும் சம்பிரதாயமும் நடைபெற்றது.