புதுடெல்லி: இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை அக்டோபர் 26-ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியா – சீனா இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது. அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள், சீன தரப்பில் 45 பேர் உயிரிழந்தனர்.இதன்காரணமாக, இரு நாடுகள் இடையிலான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகம் முழுவதும் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், இந்தியா – சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை. சர்வதேச அரங்கில் இரு நாடுகளும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தன. கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போதுகூட பாகிஸ்தானுக்கு ராணுவரீதியாக சீனா பல்வேறு உதவிகளை செய்தது.
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு: இந்த நிலையில், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்தார். அமெரிக்காவின் புதிய வரி விகிதம் கடந்த ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தது.
இந்த சூழலில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் ரகசிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், ‘சர்வதேச விவகாரங்களில் இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எல்லையில் அமைதியை ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவின் வரிவிதிப்பு போரை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு சீன அதிபர் சிறப்பு அழைப்பு விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, கடந்த ஆகஸ்ட் இறுதியில் சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய மோடி, “இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகள்தான், எதிரிகள் அல்ல” என்று கூறினார். இதே கருத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வழிமொழிந்தார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜின்பிங்கும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா – சீனாவின் குவாங்சூ நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை அக். 26-ம் தேதி தொடங்க உள்ளது.
‘இரு நாடுகளின் விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் சமீபத்தில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எட்டப்பட்ட முடிவின்படி, அக்டோபர் இறுதியில் இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது’ என்று மத்திய வெளியுறவுத் துறை நேற்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்துக்கு முன்பாக இந்தியா – சீனா இடையே மாதம்தோறும் 539 நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. ஏர் இந்தியா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ், சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பயணிகள், சரக்கு விமானங்களை இயக்கின. இதன்மூலம் மாதம்தோறும் இரு நாடுகளை சேர்ந்த 1.25 லட்சம் பேர் விமான பயணம் மேற்கொண்டனர்.
கரோனா காலத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன்பிறகு, சீனா செல்ல வேண்டிய இந்திய விமான பயணிகள் வங்கதேசம், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் வழியாக சீன நகரங்களுக்கு சென்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் கடிதம் காரணமாக இந்தியா, சீன உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. படிப்படியாக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் சீன நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படும். இதேபோல சீன தலைநகர் பெய்ஜிங், அந்த நாட்டின் வர்த்தக தலைநகர் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவைகள் தொடங்கப்படும். தற்போது டெல்லியில் இருந்து வேறு நாடுகள் வழியாக பெய்ஜிங் செல்ல ரூ.20,000 விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேரடி விமான சேவை தொடங்கப்படுவதால் இந்த கட்டணம் 20 சதவீதம் வரை குறையும். பயண நேரமும் குறையும்.