சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: “செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த மாதம் 28ம் தேதி மாலை சென்னை பெரம்பூர் அகரம் பகுதியில் இருந்து வேன் ஒன்றில் 17 நபர்கள் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களில் பெரம்பூர், சக்கர பாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா (17) மற்றும் துளசி (16) ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கடந்த மாதம் 30ம் தேதி அன்று சிறுமிகள் இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்ற துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.