சென்னை: சென்னை மாநகராட்சியில், நடப்பு அரையாண்டில் ரூ.995 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-25-ம் நிதியாண்டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கு கடைசி நாள் நேற்றுடன் நிறைவடைந்தது.
அதன்படி, ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து செப்.30-ம் தேதி வரை, சென்னை மாநகராட்சியில் ரூ.930 கோடி வரி வசூலாகி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதில், 75 சதவீதம் பேர் இணையம் மூலம் வரி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியில் தற்போது 13.50 லட்சம் கட்டிடங்கள் சொத்து வரி செலுத்த வேண்டும் என்கிற நிலை இருந்து வருகிறது. இதில், 8 லட்சம் கட்டிடங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடப்பு வருவாய் ஆண்டில் ரூ.2,300 கோடிக்கு மேல் வரி வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.