திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 24-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. அதே நாள் மாலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சுவாமிக்கு அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினர். அன்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் வீதி உலாவுடன் பிரம்மோற்சவ விழாவின் வாகன சேவைகள் தொடங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்து பல்லக்கு வாகனம், கற்பக விருட்ச வாகனம், சர்வ பூபால வாகனம், மோகினி அலங்காரம், கருட சேவை, அனுமன் வாகனம், தங்க ரத ஊர்வலம் மற்றும் கஜ வாகனம் என வரிசையாக கடந்த 6 நாட்களில் ஒவ்வொரு வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிலையில், 7-ம் நாளான நேற்று காலை சூரிய நாராயணர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 452 நடன கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர்.
சூரிய பிரபை வாகனத்தை தொடர்ந்து இரவு சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளிய மலையப்பர், 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாட வீதிகளில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், நடன குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
பிரம்மோற்சவத்தின் 8-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோயில் முன்னிருந்து தேரோட்டம் தொடங்க உள்ளது. இதில் நேர்த்தி கடன் செலுத்த திரளான பக்தர்கள் வர உள்ளனர். இதனை தொடர்ந்து இரவு குதிரை வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை 2-ம் தேதி காலை கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மாலை கொடி இறக்க நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.