சென்னை: சென்னை, சேலம் கோட்டங்களுக்கு உட்பட்ட 20 ரயில் நிலையங்களில் ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த ரயில்வே வாரியம் ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், பாதுகாப்பாக இயக்கவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்ற நவீன சிக்னல் முறையை செயல்படுத்த ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங்’ என்பது ரயில்களை பாதுகாப்பாக இயக்க ரயில்வே கையாளும் இயந்திர தொழில்நுட்ப கட்டமைப்பு ஆகும்.
இது இயந்திரவியல், மின்சாரவியல் தொடர்புடையது. ஒரு தடத்தின் வழியாக ரயிலை உள்ளே வரவழைக்கவோ, அனுப்பவோ தேவைப்படும் பாயின்ட்கள், ரயில் செல்வதற்கு ஏற்ப பூட்டப்பட்டு, ரயில்களை பாதுகாப்பாக அனுமதிக்கும் ‘சிக்னல் முறையே’ இன்ட்டர் லாக்கிங் என அழைக்கப்படுகிறது.
இதில் பல வகைகள் உள்ளன. ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும்போது, அதற்கு ஏற்ப இந்த இன்ட்டர் லாக்கிங் தரமும் உயர்த்தப்படுகிறது. சென்னை கோட்டத்தில் காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே உள்ள காட்பாடி சந்திப்பு, லத்தேரி, காவனூர், குடியாத்தம், வளத்தூர், மேல்பட்டி, பச்சக்குப்பம், ஆம்பூர், விண்ணமங்கலம், வாணியம்பாடி, கேட்டாண்டபட்டி ஆகிய 11 ரயில் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எலெக்ட்ரானிக் இன்ட்டர் லாக்கிங் தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன சிக்னல் திட்டம் செயல்படுத்த ரூ.135.65 கோடியும், சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட சாமல்பட்டி, டேனிஷ்பேட்டை, கருப்பூர், வீரபாண்டி சாலை, மகுடஞ்சாவடி, சங்ககிரி உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் இதை செயல்படுத்த ரூ.108.81 கோடியும் தேவை என ரயில்வேக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கிடையே, ரயில்வே வாரியம் இந்த 2 திட்டப் பணிகளுக்கு ரூ.230.06 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நவீன சிக்னல் தொழில்நுட்பத்தை செயல்படுத்தும்போது, ரயில்களின் வேகமும் அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.