சென்னை: புதிய தமிழகம் உள்ளிட்ட 10 கட்சிகள் 3 ஆண்டுகளாக வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்யாத நிலையில், அக்கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுபதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்திந்திய எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம், கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, ஜெபமணி ஜனதா, காமராஜர் தேசிய காங்கிரஸ், மக்கள் சக்தி கட்சி, என் இந்தியா கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி (சிவராஜ்), தமிழக முன்னேற்ற காங்கிரஸ், வளமான தமிழக கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகள் 2021-22, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய நிதியாண்டுகளுக்கான வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்கவில்லை.
நேரடி விசாரணை: இந்திய தேர்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, சம்பந்தப்பட்ட 10 கட்சிகள் தேர்தல் செலவின அறிக்கைகளை உரிய படிவத்தில் சமர்ப்பிக்கவில்லை. எனவே, அந்த கட்சிகளை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. எனினும், அதற்கு முன்பாக 10 கட்சிகளுக்கு தங்கள் கருத்தை தெரிவிக்க ஒரு வாய்ப்பு அளிக்கும் விதமாக தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் மூலமாக நேரடி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட கட்சிகள் எழுத்துப்பூர்வமான அறிக்கை மற்றும் உரிய ஆவணங்களுடன் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் முன் ஆஜராக வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் கட்சிகளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையெனில், இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பிக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.