சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் ரயில் உட்பட 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (06075) புறப்பட்டு, நாளை மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து அக்.5-ம் தேதி மாலை 4.30 மணிக்கு சிறப்பு ரயில் (06076) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் – செங்கோட்டை தாம்பரத்தில் இருந்து இன்று (30-ம் தேதி) மாலை 4.15 மணிக்கு முன்பதிவில்லா அதிவிரைவு சிறப்பு ரயில் (06013) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டையை அடையும். சென்னை எழும்பூரில் இருந்து இன்று (30-ம் தேதி) இரவு 11.45 மணிக்கு மெமு விரைவுசிறப்பு ரயில் (06161) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும்.
இதுதவிர, யஸ்வந்த்பூர் – மங்களூரு சந்திப்பு இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவும், சென்னை எழும்பூர் – திருவனந்தபுரம் வடக்கு நிலையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது. மற்ற இரண்டு சிறப்பு ரயில்கள் முன்பதிவில்லாத ரயில்கள் ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.