திருவனந்தபுரம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியும் ஆதரவு தெரிவித்தது.
தீர்மானத்தை தாக்கல் செய்து, முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கேரள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை வெளிப்படையான முறையில் செய்ய வேண்டும். ஆனால், தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள நினைக்கும் வாக்காளர் பட்டியல் திருத்தம், உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாக சந்தேகம் எழுகிறது. தேசிய குடிமக்கள் பதிவு திட்டத்தை அமல்படுத்த, இதுபோல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக பரவலாக சந்தேகம் உள்ளது.
பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அதை உறுதிப்படுத்துகின்றன. மேலும் இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.
பின்னர், எம்எல்ஏ.க்கள் சிலர் கூறிய திருத்தங்களுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.