மதுரை: தவெக வழக்கறிஞர் அறிவழகன் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது போலீஸார் போக்குவரத்தை சீர்செய்யவில்லை. பாதுகாப்புக்கு போதுமான காவலர்களை நியமிக்கவும் இல்லை. கரூர் கூட்டத்தில் போலீஸார் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதியால் 41 பேர் உயிரிழந்தனர். அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் தயாராக உள்ளார். ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கேட்கும். புலன் விசாரணை நடத்த முடியாது.
கூட்டத்தில் செந்தில் பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. அதன் பிறகே நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் அளிக்கும் விளக்கம், பொறுப்பை தட்டிக்கழிப்பதாக உள்ளது.
தவெகவினர் போலீஸாரின் நிபந்தனைகளை மீறவில்லை. நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை இரவிலேயே உடற்கூராய்வு செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்களும், இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.