சென்னை: திட்டமிட்டபடி அக்டோபர் 12-ம் தேதி முதுகலை பட்டதாரி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆசிரியர் வாரியம் ஜூலை 10-ம் தேதி அன்று வெளியிட்டு அதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 வரைபெற்றுக்கொண்டது.
எழுத்துத்தேர்வு அக். 12-ம் தேதி நடைபெறும் என அறிவித்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கல்வி உளவியல் மற்றும் பொது அறிவு பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால் அப்பாடங்களுக்கு தயாராகும் வகையில் தேர்வை 3 வாரம் தள்ளிவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைப்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலிக்கலாம் என அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் திங்கட்கிழமை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடந்தது.
பெரும்பாலான தேர்வர்கள் தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுமா என எதிர்பார்த்து வந்தனர். ஆனால், தேர்வு தள்ளிப்போகுமா என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்நிலையில், தேர்வர் ஒருவர், முதுகலை ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்கக்கோரி தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் முதல்வரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு அளித்திருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநர் முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலருக்கு அனுப்பியுள்ள விளக்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, ஒரு தேர்வுக்கான அறிவிப்புக்கும் தேர்வு தேதிக்கும் இடையே 60 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.
இருப்பினும் முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வர்களின் நலன் கருதி, 90 நாட்களுக்கு மேல் காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு அக். 12-ம் தேதி அன்று நடைபெறும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.