சென்னை: வேதனைக்குரிய கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ளனர். நெரிசல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்வர் ஸ்டா லின் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கரூரில் நடந்தது பெருந்துயரம், கொடுந்துயரம். இதுவரை நடக்காத துயரம், இனி, நடக்கக்கூடாத துயரம். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. கனத்த மனநிலையிலும், துயரத்திலும்தான் இன்னும் இருக்கிறேன்.
செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு, எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பிறகும், என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை. உடனடியாக அன்று இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள், பெண்கள் என்று 41 உயிர்களை இழந்திருக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் அறிவித்து, அதை உடனடியாக வழங்கி வருகிறோம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. நடந்த சம்பவத்துக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய, முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் அறிக்கை அடிப்படையில், அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று உறுதியளிக் கிறேன்.
இதற்கிடையே, சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் வதந்திகள், பொய் செய்திகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் உயிரிழப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும், என்னை பொருத்தவரை அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில், பொறுப்பற்ற முறையில் வெளியிடப்படும் விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும். இனிவரும் காலங்களில் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது, எத்தகைய பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.
எனவே, விசாரணை ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளோடு ஆலோசனை நடத்தி, இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும். அத்தகைய நெறிமுறைகளுக்கு எல்லோரும் ஒத்துழைப்பு தருவார்கள் என்று நம்புகிறேன். மனித உயிர்களே எல்லாவற்றுக்கும் மேலானது. மானுடப் பற்றே அனைவருக்கும் வேண்டியது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனிதப் பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லோரும் மக்கள் நலனுக்காக சிந்திக்க வேண்டும். தமிழகம் எப்போதுமே பல வகைகளிலும் நாட்டுக்கு முன்னோடியாகதான் இருந்து வருகிறது. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை.இவ்வாறு முதல்வர் தெரிவித்து உள்ளார்.