சென்னை: “கரூரில் இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.” என தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பலி 41 ஆனது…கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிசிச்சையில் இருந்த கரூர் தொழிற்பேட்டையை சேர்ந்த கவின் (34) சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 40ஆக நேற்று அதிகரித்தது. இந்நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சுகுணா (65) சிகிச்சை பலனின்றி இன்று (செப். 29-ம் தேதி) அதிகாலை மரணமடைந்தார். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா – இந்நிலையில், கரூர் சம்பவம் குறித்து தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மவுனம் கலைத்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்த பதிவில், “என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன்… இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது.
மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருகிறேன். ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள்.
இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இந்த மரணங்கள். அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பும், வலியும் சராசரி மனிதனாகக் கடந்து செல்லும் மனநிலையில் என் மனம் இப்போது இல்லை.
இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்த குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியை சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களை பகிர்ந்துகொண்டுள்ளேன். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் பின்னணியில் சதி இருக்கலாம் என்று தவெக சந்தேகம் எழுப்பியுள்ள நிலையில், ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பதிவில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்!” என்று குறிப்பிட்டுள்ளது கவனம் பெறுகிறது.