சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது வரை ஒட்டுமொத்தமாக 45.78 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை (44.6 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் பணிகள் நடைபெறுகின்றன.
மொத்தம் 118 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்கப்பாதையில் 43 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது. சுரங்கப்பாதை பணியை பொருத்தவரை, மாதவரத்தில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, பசுமை வழிச்சாலை, கலங்கரை விளக்கம், சேத்துப்பட்டு, பனகல் பூங்கா உட்பட பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் தொடங்கின. பசுமைவழிச் சாலை – அடையாறு, சேத்துப்பட்டு – ஸ்டெர்லிங் சாலை, அயனாவரம் – பெரம்பூர், பனகல் பூங்கா – கோடம்பாக்கம் (ஒரு பாதையிலும்) சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. கலங்கரை விளக்கம் – மயிலாப்பூர் சுரங்கப்பாதை பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ராயப்பேட்டை – ஆர்.கே.சாலை, பசுமைவழிச் சாலை – மந்தைவெளி ஆகிய சுரங்கப்பாதை பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன. இதுதவிர, பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுபோல, உயர்மட்டப்பாதை பணி பொருத்தவரை, 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி – போரூர் தடத்தில் பணிகள் நிறைவடைந்துள்ளன. பல இடங்களிலும் உயர்மட்டப் பாதை பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் தற்போது வரை, ஒட்டுமொத்தமாக 45.78 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி – போரூர் தடத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளை முடித்து, மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிட்டு உள்ளோம்.
இதையடுத்து, சென்னை வர்த்தக மையம் – போரூர் பணிகளை முடிக்க உள்ளோம். போரூர் – வடபழனி, போரூர்- கோயம்பேடு ஆகிய உயர்மட்டப்பாதை பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உயர்மட்ட பாதை, சுரங்கப்பாதை சேர்த்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 45.78 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன. அதாவது 3-வது வழித்தடத்தில் 39.18 சதவீதமும், 4-வது வழித்தடத்தில் 60.02 சதவீதமும், 5-வது வழித்தடத்தில் 43.52 சதவீதமும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சுரங்கப்பாதை பணி 23.97 கி.மீ. தொலைவுக்கும், உயர்மட்டப்பாதை பணியை பொருத்தவரை (ஒற்றைப்பாதை) 35 கி.மீ. தொலைவுக்கும் நிறைவடைந்துள்ளன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மிகவும் சவாலான பணியாக இரட்டை அடுக்கு மேம்பாலப்பணி இருக்கிறது. இது, மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடம், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் சில இடங்களை இணைகின்றன.
இங்கு தண்டவாளப்பணி, கான்கிரீட் பணி, லாஞ்சிங் யு கர்டர் பணி ஆகிய பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணி மேற்கொள்ள 100-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய கனகர இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 2,500-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.