கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில சுவரொட்டிகள் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்போது மேலும் இருவர் மரணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கரூரில் கரூர் கோவை சாலை, ஈரோடு சாலை, வேலுசாமிபுரம், காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சுவரொட்டியில், அதில் தவெக தலைவர் விஜய் கைகளை உயர தூக்கியுள்ள நிலையில் அவரது கைகளில் இருந்து ரத்தம் வடிவது போலவும், ‘தமிழக அரசே அப்பாவி உயிர்களைப் பலி வாங்கி தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக் குற்றவாளி என கைது செய் – தமிழ்நாடு மாணவர் சங்கம்’ என அச்சிடப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்தப் போஸ்டர் நகர் முழுவதும் பரவலாகப் பல இடங்களிலும் தென்படுகிறது.