காசா: இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்திலுள்ள காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தீவிரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் சுமார் 65,000-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காசாவில் போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது.
ஹமாஸிடமிருந்து பிணைக் கைதிகளை மீட்டு போரை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மேலும், ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்க 48 மணி நேரம் கெடுவைவும் அமெரிக்கா விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே போரை நிறுத்த 21 அம்ச அமைதித் திட்டத்தையும் அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது.
அமெரிக்கா அறிவித்துள்ள 21 அம்சத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய பிரிவுகள்:
காசா பகுதி தீவிரவாதம் இல்லாத, அமைதியான மண்டலமாக மாற்றப்படும். காசா மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
இரு தரப்பும் இந்தத் திட்டத்தை ஒப்புக்கொண்டால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்படும். இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை நிறுத்தி, காசாவிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கும். பாலஸ்தீனர்களை கொண்ட ஒரு குழுவைக் கொண்டு காசாவில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்படும். அந்த அமைப்பே காசாவில் அன்றாட நிர்வாகத்தைக் கவனிக்கும்.
அமெரிக்காவின் தலைமையில் அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளைக் கொண்ட ஒரு புதிய சர்வதேச குழு இதைக் கண்காணிக்கும். பாலஸ்தீனிய ஆணையம் தனது சீர்திருத்தத் திட்டத்தை முடிக்கும் வரை காசாவின் மறுசீரமைப்புக்கு நிதி திரட்டுவது இக்குழுவின் பணியாகும்.
இந்தத் திட்டத்துக்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த 48 மணி நேரத்துக்குள், உயிருடன் உள்ள மற்றும் இறந்த அனைத்துப் பிணைக் கைதிகளும் இஸ்ரேல் வசம் ஒப்படைக்கப்படுவார்கள். போர் உடனடியாக நிறுத்தப்படும் என்பன போன்ற அம்சங்கள் இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
அதேநேரத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் முடிவு செய்துள்ளன. அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஒப்புக்கொள்ளவில்லை. இதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்று அவர் அறிவித்துள்ளார்.