சென்னை: கரூர் துயரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஒய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அறிக்கை அளித்த பிறகு, அதன் அடிப்படையில் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்களின் எண்ணிக்கை தற்போது 40 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும், இந்தச் சம்பவத்தை அடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்த கருத்துகள் குறித்தும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
நேற்று 27.9.2025 கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுவந்த செய்தியை அறிந்த முதல்வர், உடனடியாக இரவே சென்னை, தலைமைச் செயலகத்திற்குச் சென்று, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடனும், காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநர் ஆகியோரை அனுப்பிவைத்து போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதைத் தொடர்ந்து, முதல்வர், நேற்று நள்ளிரவே கரூர் மாவட்டத்துக்கு நேரில் சென்றார்.
இன்று (28.9.2025) அதிகாலையில், முதல்வர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, சிகிச்சை பெற்று வருபவர்களின் விவரங்களையும், தேவைப்படும் உதவிகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரின் நிலை குறித்தும் கேட்டறிந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருபவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் வரவழைத்துப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுடன் ஒருங்கிணைந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பின்னர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். கூட்ட நெரிசலில், உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அமராவதி மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதல்வர், அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களிடம் உடல் நலம் குறித்து விசாரித்தார்.
அதன்பிறகு, அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியின் விவரம்: மிகுந்த துயரத்தோடு, மிகவும் கனத்த இதயத்தோடு உங்கள் முன் நான் நின்றுக் கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்த கொடூரமான விபத்தை பற்றி விவரிக்க முடியாத அளவுக்கு ஒரு சோக சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதைப்பற்றி விவரிக்க கூட எனது மனம் இடம் கொடுக்கவில்லை. அந்த அளவுக்கு நான் வேதனையில் இருக்கிறேன்.
நேற்று இரவு, சென்னையில் அதிகாரிகளிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு பலர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது. உடனே, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜியை தொடர்பு கொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் என்று கூறினேன்.
அதன் பிறகு மாவட்ட ஆட்சித் தலைவரையும் தொடர்புகொண்டு கேட்டபோது, அவரும் சில தகவல்களை கூறினார். அடுத்த 5 நிமிடங்களில் மருத்துவமனைக்கு முதலில் 4, 5 பேர் கொண்டு வரப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. பிறகு போகப்போக அதிகமான நபர்களை கொண்டு செல்கிறார்கள் என்று சொன்னார்கள்.
அதனைத் தொடர்ந்து, மரண செய்திகள் வர ஆரம்பித்தன. நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. உடனடியாக நான் இந்த மாவட்டத்தின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அமைச்சர்களை தொடர்பு கொண்டேன். அதன் அடிப்படையில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை உடனடியாக கரூர் செல்லும்படி உத்தரவிட்டேன். பிறகு நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை அழைத்து உடனடியாக அங்கு சென்று பாருங்கள் என்று அவரையும் அனுப்பி வைத்தேன்.
பிறகு டிஜிபி, சட்டம் ஒழுங்கு ADGP மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளையெல்லாம் தொடர்புகொண்டு உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டு அவர்களையும் அனுப்பி வைத்தேன்.
அந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தன. அதற்கு பிறகு உடனடியாக நம்முடைய மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, வேலு ஆகிய அனைவரையும் அழைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு சென்றேன். DGP மற்றும் உயர் அலுவலர்களையும் கலந்தாலோசித்து என்ன நடவடிக்கை எடுக்கலாம்? எப்படி மீட்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என்ற விபரங்களை எல்லாம் கேட்டேன்.
பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள், கரூர் அருகில் உள்ள மாவட்டங்களில் இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், மருத்துவர்கள் உடனடியாக கரூருக்கு செல்லும்படி உத்தரவிட்டதன் அடிப்படையில், கரூருக்கு வந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்புத் தரவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பெருந்துயரமான இந்த சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்களை இதுவரை நாம் இழந்திருக்கிறோம். இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 17 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர்.
ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் என்பது இதுவரை நடக்காதது – இனிமேலும் நடக்கக்கூடாது. மேலும், 51 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று கொண்டிருக்கிறார்கள். அதில் 26 பேர் ஆண்கள், 25 பேர் பெண்கள்.
இவர்கள் எல்லோரும் நலமடைந்து விரைவில் மீண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இறந்த உயிர்களுக்கெல்லாம் கனத்த இதயத்தோடு நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என்று தெரியவில்லை. இந்த துயரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
அதுமட்டுமல்ல, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை உடனடியாக அமைப்பதற்கு நான் உத்தரவிட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு இன்று காலை கரூர் வரலாம் என்றிருந்தேன். இந்த கொடூரமான காட்சிகளை எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்தபோது எனக்கு மனது கேட்கவில்லை. வீட்டில் இருக்கவே என்னால் முடியவில்லை. அதனால்தான் முன்கூட்டியே வரவேண்டும் என்று இன்று (28.9.2025) அதிகாலை, 1 மணியளவில் இங்கு வந்திருக்கிறேன். மரணமடைந்திருக்கக்கூடிய குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் மீண்டும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் விழைகிறேன்.
கேள்வி – முதற்கட்ட விசாரணை குறித்து… – முதல்வரின் பதில்: ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஆணையம் அறிக்கை அளித்த பிறகு முழுமையாக சொல்கிறோம். இதற்கிடையில், அரசியல் நோக்கத்தோடு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஆணையம் அதற்காகதான் அமைத்திருக்கிறோம். அந்த ஆணையத்தின் மூலமாக உண்மை வெளிவரும். அந்த உண்மை வெளிவரும்போது நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை…” என்று குறிப்பிட்டுள்ளார்.