துபாய்: ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இரவு துபாய் சர்வதேச மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது. தொடர்ந்து சூப்பர் 4 சுற்றிலும் 3 ஆட்டங்களில் வெற்றியை பதிவு செய்திருந்தது. அதே வேளையில் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்தது.
ஆசிய கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி முதன்முறையாக தற்போதுதான் இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. அந்த அணி லீக் சுற்றில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. இந்திய அணியின் பேட்டிங்கில் 204.63 ஸ்டிரைக் ரேட்டுடன் 309 ரன்கள் குவித்துள்ள அபிஷேக் சர்மா மீண்டும் ஒரு முறை உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தக்கூடும். கடந்த ஆட்டத்தில் விரைவாக ஆட்டமிழந்த ஷுப்மன் கில் கவனமுடன் விளையாடக்கூடும். இது ஒருபுறம் இருக்க சூர்யகுமார் யாதவிடம் இருந்து நடப்பு தொடரில் பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
அவர், இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக 71 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். கேப்டன் பணியுடன் பேட்டிங்கிலும் அவர், கூடுதல் முனைப்புடன் செயல்படும் பட்சத்தில் அணியின் பலம் அதிகரிக்கும். நடுவரிசையில் திலக் வர்மா, சஞ்சு சாம்சன் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். ஆல்ரவுண்டர்களாக அக்சர் படேல், ஷிவம் துபே சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 202 ரன்களை குவித்த போதிலும் எளிதாக வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. ஆட்டத்தை சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்றே இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரீத் பும்ரா இன்று களமிறங்குவது பலம் சேர்க்கக்கூடும்.
எனினும் நடப்பு தொடரில் அவரிடம் இருந்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல் திறன் வெளிப்படவில்லை. மேலும் துல்லியமாக வீசுவதிலும் அவர், தேக்கம் அடைந்துள்ளார். இறுதிப் போட்டி என்பதால் பும்ரா மீண்டும் தனது யார்க்கர்களால் பலம் சேர்க்க முயற்சிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் 13 விக்கெட்கள் கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். வருண் சக்ரவர்த்தியும் பலம் சேர்க்கக்கூடும்.
பாகிஸ்தான் அணியின் பேட்டிங், இந்த தொடரில் சொல்லும்படி பெரிய அளவில் இல்லை. ஜஸ்பிரீத் பும்ராவுக்கு எதிராக தாக்குதல் ஆட்டம் மேற்கொண்ட சாஹிப்ஸாதா ஃபர்ஹானைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேன்களிடம் இருந்து பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.
சைம் அயூப் 4 ஆட்டங்களில் டக்-அவுட் ஆகி உள்ளார். அதேவேளையில் ஹூசைன் தலத், சல்மான் அலி ஆகா ஆகியோர் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது பலவீனமாக உள்ளது. பஹர் ஸமானிடம் இருந்தும் எதிர்பார்த்த அளவிலான செயல் திறன் வெளிப்படவில்லை. பேட்டிங்கில் தடுமாறும் பாகிஸ்தான் அணி பந்து வீச்சு திறனை பெரிதும் நம்பி உள்ளது. ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப் வேகக்கூட்டணி இந்திய அணியின் தொடக்க வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
‘களத்தில் தடுக்க மாட்டேன்’ – பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது, ”ஒவ்வொருவருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஒரு வேகப்பந்து வீச்சாளர் உணர்ச்சிகளைக் காட்டுவதைத் தடுத்தால், பிறகு என்ன மிஞ்சும்? அது அவமரியாதையாக இல்லாத வரை நான் யாரையும் தடுக்க மாட்டேன்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நிறைய அழுத்தங்களுடன் வருகின்றன. கடந்த இரண்டு ஆட்டங்களில் நாங்கள் அதிக தவறுகளைச் செய்ததால் தோற்றோம். இறுதிப் போட்டியில் இரு அணிகளுக்கும் ஒரே மாதிரியான அழுத்தமே இருக்கும். நான் 2007-ம் ஆண்டு யு-16 அணியில் விளையாடத் தொடங்கினேன். எந்த அணிகளும் கைகுலுக்காமல் இருந்ததை நான் பார்த்ததில்லை. இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மோசமாக இருந்தபோதும், நாங்கள் கைகுலுக்கினோம். வெளியில் நடக்கும் விஷயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. கட்டுப்படுத்தக்கூடியவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அது என்னவென்றால், ஆசியக் கோப்பையை வெல்வதுதான்” என்றார்.
8 முறை சாம்பியன்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 8 முறை சாம்பியன் பட்டம் (1984, 1988, 1990, 1995, 2010, 2016, 2018, 2023) வென்றுள்ளது. இதில் 7 முறை 50 ஓவர் போட்டி வடிவிலும், ஒரு முறை டி 20 வடிவிலான தொடரிலும் (2016-ம் ஆண்டு) இந்தியா வாகை சூடி உள்ளது. பாகிஸ்தான் அணி 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தது. இந்த இரு முறையும் 50 ஓவர் வடிவில் தொடர் நடத்தப்பட்டிருந்தது. டி 20 வடிவில் பாகிஸ்தான் அணி தற்போதுதான் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.
‘இருக்கையின் விளிம்பில்’ – இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் கூறும்போது, “ஷாகின் ஷா அப்ரிடி ஆக்ரோஷமான பந்து வீச்சாளர், அவர் ஒவ்வொரு வாய்ப்பிலும் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பார். அதேவேளையில் அபிஷேக் சர்மா பின்வாங்கப் போவதில்லை. இதுவரை, இந்த இருவரும் நேருக்குநேர் மோதிய ஒவ்வொரு முறையும், கிரிக்கெட் ஆதரவாளர்களாகவும் ரசிகர்களாகவும் நாம் அனைவரும் இருக்கையின் விளிம்பில் இருக்கிறோம், அது ஆட்டத்துக்கு மிகவும் நல்லது” என்றார்.